நீரா ராடியா வீடு உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ சோதனை
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நீரா ராடியா, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் விவரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் உச்ச நீதிமன்றம் வரை சென்றது இந்த விவகாரம்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நீரா ராடியாவின் வீடுகளிலும், பாரகம்பாவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லியில் 7 இடங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளதால் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மந்திரப்புன்னகை
நடிகர்கள்: கரு.பழனியப்பன், மீனாட்சி, சந்தானம், தம்பி ராமய்யா, ரிஷி
இயக்கம்: கரு.பழனியப்பன் தயாரிப்பு: கார்த்திக் நாகராஜன்
இசை: வித்யாசாகர் ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி
மகன் கதிருக்கும், கணவனுக்கும் துரோகம் செய்துவிட்டு செல்கிறார் அம்மா. மானத்துக்காக தற்கொலை செய்துகொள்கிறார் அப்பா. தவிக்கும் கதிர், பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறான். ஆர்கிடெக் ஆகிறான். கார் ஷோரூமில் பணியாற்றும் நந்தினி, கதிரை சந்திக்கிறாள். காதல். பெண், போதை என்று வாழும் கதிருக்கு, தன்னை காதலிப்பவள், அம்மாவை போல ஏமாற்றுவாளோ என சந்தேகம். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
இயக்கி, ஹீரோவாகி இருக்கிறார் கரு. பழனியப்பன். கண்ணாடி, தாடி, ஊடுருவும் பார்வை என, மனச்சிதைவு அடைந்தவனின் வாழ்க்கையை, அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவுடனான அவரது உரையாடலும், காதலுக்கு அவர் தரும் விளக்கமும், பிறந்த நாளுக்கு கேக் வாங்கி வைத்திருக்கும் மீனாட்சியிடம் எரிந்து விழுவதும் சுவாரஸ்ய காட்சிகள். ஹீரோ ஆவதற்காக, நாலு பைட், நாலு டூயட் கோதாவில் இறங்காததற்கு, பழனிக்கு வாழ்த்து சொல்லலாம். வழக்கமாக குடும்பம், உறவுகள் பற்றி கதை சொல்லும் கரு.பழனியப்பன் இதில் மிஸ்ஸிங்.
அம்மா செய்த துரோகத்தால் மீனாட்சியை பழனியப்பன் வெறுக்க, விடாமுயற்சியுடன் அவர் தன்னை துரத்துவதை அறிந்து, ‘உன்னை எனக்கு பிடிக்கல. வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க’ என்று வெறுப்பை உமிழும்போது, நடிப்பில் தேர்ச்சி. பழனியப்பனுக்கு வீட்டை வாடகைக்கு விட்டு, தினமும் அவருடனேயே தண்ணியடித்து கும்மாளம் போடும் கேரக்டரில் தம்பி ராமய்யா. அவரும், பழனியப்பனும் சந்தானத்தின் இரவுநேர சந்தோஷத்தை கெடுக்க, பார்ட்டி வைப்பதும், பிறகு மனைவியிடம் மாட்டிக்கொண்டு சந்தானம் தவிப்பதும் காமெடி கலாட்டா. கட்டிடம் கட்டுகின்ற இடத்தில் சந்தானம் செய்யும் அலப்பறைகளும், மனைவிக்கு புடவை வாங்கிச் சென்று, அவரிடம் வசைபடும்போது புலம்புவதும், மருந்து கடையில் காண்டம் வாங்க வெட்கப்பட்டு தவிப்பதும், அலுவலகத்தில் பழனியப்பனிடம் மாட்டிக்கொண்டு அல்லல் படுவதுமாக அட்டகாசம் செய்கிறார் சந்தானம்.
பழனியப்பனை விரும்பும் மகேஸ்வரியிடம், தான் அவர் மீது வைத்திருக்கும் காதலை உணர்த்தும் மீனாட்சி, தன்னை திட்டும் அண்ணனிடம், பழனியப்பனை குணப்படுத்த உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லும் காட்சியில், ‘நடிக்கவும் தெரியும்’ என்று நிரூபித்துள்ளார். அவரை ஒருதலையாக காதலிக்கும் ரிஷி, அப்பா நகுலன் பொன்னுசாமி, அம்மா ரம்யா, ஒரு காட்சியில் வரும் ஸ்ரீகாந்த், மானேஜராக வரும் மோசர்பேர் தனஞ்செயன் மனதில் நிற்கின்றனர். வித்யாசாகரின் இசையும், ராம்நாத் ஷெட்டியின் கேமராவும் ராஜீவனின் கலை இயக்கமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ‘உடம்பை கெடுக்கிற குவார்ட்டரை சத்தம் போட்டு வாங்குறோம்; உடம்புக்கு பாதுகாப்பான, காண்டத்தை ஏன் சத்தம் போட்டு வாங்கக் கூடாது?’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே நச்சென்று இருக்கிறது.
ஆனால், தெளிவான திரைக்கதை இருந்தும் அழுத்தமாக சொல்ல வேண்டிய காட்சிகள், மேலோட்டமாக சொல்லப்பட்டிருப்பதால், எதுவும் மனதில் பதியவில்லை. தனிமை விரும்பி, மாறுபட்ட மனநிலை உள்ளவன் என்பதற்காக, படம் முழுக்க சிகரெட் மற்றும் குவார்ட்டர் பாட்டில் சகிதமாக எப்போதும் பழனியப்பன் இருப்பது உறுத்தல். காதலையும், மீனாட்சியையும் தீவிரமாக வெறுக்கும் ஹீரோ, கடைசியில் சட்டென்று மனம் மாறுவது நம்பும்படி இல்லை.